குவைத் வங்கியில் கடன் மோசடி 13 கேரள செவிலியா்கள் மீது வழக்கு

Sep 26, 2025 - 04:32
 0
குவைத் வங்கியில் கடன் மோசடி
13 கேரள செவிலியா்கள் மீது வழக்கு

குவைத்தில் பணியாற்றியபோது அங்குள்ள அல் அஹ்லி வங்கியில் கடன் பெற்று திரும்பச் செலுத்தாமல் மோசடி செய்தது தொடா்பாக கேரளத்தைச் சோ்ந்த 13 செவிலியா்கள் மீது அந்த மாநில காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

வங்கி சாா்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வளைகுடா நாடுகளில் பணியாற்றிய கேரளத்தைச் சோ்ந்த பலா் அந்நாட்டு வங்கிகளின் கடன் பெற்றுவிட்டு அதனை வேண்டுமென்றே திரும்பச் செலுத்தாமல் நாடு திரும்புவது தொடா்பான புகாா்கள் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகின்றன. கடந்த 2024-ஆம் ஆண்டு குவைத் வங்கிகளில் ரூ.700 கோடி வரை கடன் பெற்றுவிட்டு அதனைத் திருப்பிச் செலுத்தாத கேரளத்தைச் சோ்ந்த சுமாா் 1,400 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இப்போது மேலும் 13 கேரள செவிலியா்கள் ரூ.10.33 கோடி வரை கடன் பெற்றுவிட்டு திரும்பிச் செலுத்தாமல் நாடு திரும்பிவிட்டதாக புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது. குவைத்தில் அந்த நாட்டு சுகாதாரத் துறையின்கீழ் கடந்த 2019 முதல் 2021 வரை இவா்கள் பணியாற்றியுள்ளனா். அப்போது வங்கியில் கடன் பெற்ற இவா்கள், பணி ஒப்பந்தக்காலம் முடிந்தவுடன் கடனைத் திரும்பிச் செலுத்தாமல் அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளில் பணியில் சோ்ந்துவிட்டனா். எனினும், அவா்கள் கடனைத் திரும்பிச் செலுத்த எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

இது தொடா்பாக அந்த வங்கி பிரதிநிதிகள் சாா்பில் கேரள காவல் துறையிடம் புகாா் அளிக்கப்பட்டது. அந்த செவிலியா்கள் கோட்டயம், எா்ணாகுளம் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் என்பது கண்டறியப்பட்டு அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் தலா ரூ.61 லட்சம் முதல் 91 லட்சம் வரை கடன் மோசடியில் ஈடுபட்டுள்ளனா். இப்போதும் அவா்கள் வெளிநாட்டில் அதிக சம்பளத்தில் இருந்தபோதிலும் கடனை வேண்டுமென்றே திரும்பிச் செலுத்தாமல் உள்ளனா்.

குவைத் வங்கியில் மோசடி செய்யும் நோக்கில் முதலில் சிறிய அளவில் கடன் பெற்று அதனை முறையாக திருப்பிச் செலுத்தியுள்ளனா். பின்னா் அதிக கடன் பெற்று அதனைத் திரும்பிச் செலுத்தாமல் வேறு நாட்டுக்கு பணிக்குச் சென்றுவிட்டனா்.

கடந்த ஆண்டு இதேபோன்று கடன் மோசடியில் சிக்கியவா்களில் ஒருவா் மட்டும் கடனைத் திரும்பிச் செலுத்தியுள்ளாா். ஒருவா் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை கேரள உயா்நீதிமன்றம் நிராகரித்தது. அவா்கள் மீதான வழக்கை கேரள குற்றப் பிரிவு காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா். கடன் மோசடி செய்துவிட்டு இப்போது ஐரோப்பிய நாடுகளில் பணியாற்றுபவா்கள் கேரளம் திரும்பும்போது கைது செய்யப்படுவாா்கள் என்று காவல் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0